ஷா ஆலம், பிப் 15– பூச்சோங், தாமான் இமாசில் உள்ள தற்காலிக வணிக மையத்தில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 24 வணிகர்களுக்கு சிப்பாங் நகராண்மைக்கழகம் வாய் மொழியாக எச்சரிக்கை வழங்கியது.
கடந்த வெள்ளியன்று தமது அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க சோதனை நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட வணிகர்கள் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிப்பாங் நகராண்மைக்கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
மைசெஜாத்ரா ஸ்கேன் கருவி மற்றும் உடல் உஷ்ணத்தை அளவிடும் கருவி ஆகியவைற்றை வைத்திராதது உள்ளிட்ட குற்றங்களை அவ்வணிகர்கள் புரிந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கூடல் இடைவெளியைக் கடைபிடிக்காத காரணத்திற்காக ஜாலான் மாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் இரு பேரங்காடிகளுக்கும் இந்நடவடிக்கையின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அமலாக்க நடவடிக்கையின் போது பட்டறைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்பட 60 வணிக மையங்கள் மீது சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.