ஷா ஆலம், மார்ச் 15– இங்குள்ள சென்சன் 7, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக (பி.கே.என்.எஸ்.) மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பின் 58 வீடுகளின் கூரைகளில் ஏற்பட்டுள்ள பழுது விரைவில் சரி செய்யப்படும்.
பழுதுபார்ப்புப் பணிகள் அல்லது கூரைகளை மாற்றும் பணி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக அக்கூரைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஷா ஆலம் மாநகர் மன்றம் மதிப்பீடு செய்யும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஒரு புளோக் கட்டிடத்தில் 60 வீடுகள் உள்ள நிலையில் இந்த பாதிப்பு பல குடும்பங்களை உட்படுத்தியுள்ளது. ஆகவே, தீர்வுக்கான சரியான வழி முறையை நாம் ஆராயவேண்டியுள்ளது. இந்த பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ள இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
பழுதுபார்ப்பு பணிகளுக்கு உண்டாகும் செலவு உள்பட அனைத்து அம்சங்கள் மீதும் மாநகர் மன்றம் மேற்கொண்டு வரும் ஆய்வின் முடிவுக்காக நாம் காத்திருக்கிறோம். அந்த ஆய்வின் முடிவுகள் கிடைத்தப் பின்னரே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
செக்சன் 7இல் உள்ள பாதிக்கப்பட்ட அந்த புளோக் 48 குடியிருப்பு பகுதிக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.