ஷா ஆலம், மார்ச் 20– கோம்பாக், சபாக் பெர்ணம், உலு லங்காட் மற்றும் கோல லங்காட்டை சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு இவ்வாண்டிற்குள் நில உரிமையை வழங்குவதற்கான முயற்சியில் சிலாங்கூர் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வட்டார மக்கள் சொந்த நிலம் மற்றும் வீட்டைப் பெறுவதை உறுதி செய்வதற்கு கடந்த பத்தாண்டு காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எனினும், நில உரிமையை வழங்கும் பணி சிக்கல் நிறைந்ததாகவும் அதிக காலம் பிடிக்கக்கூடியதாகவும் உள்ளதால் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களுக்கு நில உரிமையை வழங்குவதற்கு கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் சொந்த நிலத்தைப் பெறுவதற்கு நிலத்தின் உயரிய மதிப்பு காரணமாக இருக்கவில்லை என்றார் அவர்.
ஸ்ரீ குண்டாங், கம்போங் மிலாயுவில் நிலங்களுக்கான 5ஏ பாரங்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கேம்பாக் மாவட்ட நில அலுவலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 196 சதுர மீட்டர் முதல் 849 சதுர மீட்டர் பரப்பளவிலான அந்த நிலத்திற்கான 5ஏ பாரங்களை அப்பகுதியைச் சேர்ந்த 105 பேர் பெற்றனர்.