கோலாலம்பூர். ஏப் 7- பல அனைத்துலக போட்டிகளில் நாட்டின் இளம் பூப்பந்து விளையாட்டாளர்களை வெற்றி வாகை சூடியது குறித்து மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷா பெருமிதமும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். எதிர் காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெறுவதற்கு ஏதுவாக சிறப்பான விளையாட்டு திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும்படி விளையாட்டாளர்களை அவர் கேட்டுக் கொண்டதாக மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது நோர்ஸா ஜக்கரியா கூறினார். பூப்பந்து விளையாட்டில் நாடு தொடர்ந்து வெற்றிகளை பெறுவதற்கு குறிப்பாக, அடுத்து நடைபெறவிருக்கும் போட்டிகளில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்வதற்கு ஏதுவாக நமது விளையாட்டாளர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று பேரரசர் ஆலோசனை கூறியதாக இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார். முன்னதாக, மாமன்னர் தம்பதியினர் 2021 ஆம் ஆண்டு அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டாளர்களுக்கு இஸ்தானா நெகாராவில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் தாம் பயன்படுத்திய பூப்பந்து மட்டையை அப்போட்டியின் வெற்றியாளர் லீ ஸீ ஜியா ( வயது 23) மாமன்னரிடம் வழங்கினார். கடந்த மாதம் நடைபெற்ற போலந்து பொது பூப்பந்து போட்டியில் ஆண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் போட்டிகளில் மலேசிய இளம் வீரர்கள் வாகை சூடினர்.
|
|