ஷா ஆலம், ஏப் 7– இவ்வாண்டில் முதலாம் படிவம் செல்லும் 350 ஏழை மாணவர்களுக்கு யாயாசான் சிலாங்கூர் அறவாரியம் முழு ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளது.
கல்வியமைச்சின் சிறப்பு கல்வித் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி இது தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 1,314 விண்ணப்பங்களை யாயாசான் சிலாங்கூர் பெற்றது.
ஏழ்மை நிலையிலுள்ள மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் கல்வியமைச்சின் கல்வி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களில் 350 பேர் இந்த கல்வி வாய்ப்பினை பெற்றுள்ளனர். அவர்களில் 91 மாணவர்கள் மத்திய பள்ளி தங்கும் விடுதிகளிலும் 251 பேர் மாவட்ட பள்ளி தங்கும் விடுதிகளிலும் தங்க வைக்கப்படுவர். எஞ்சிய மாணவர்கள் தங்கும் விடுதியில் அல்லாமல் பள்ளிக்கு தினசரி வந்து செல்வர் என யாயாசான் சிலாங்கூர் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
வாய்ப்பு வழங்கப்பட்ட மாணவர்கள் உபகாரச் சம்பளம், கூடுதல் வகுப்புகள், கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள், சுய மேம்பாடு தொடர்பான அனுகூலங்களைப் பெறுவர் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.