ஷா ஆலம், ஏப் 13– இவ்வாண்டு இறுதிக்குள் AgroShop.My எனும் மின்- வணிகத்தளம் வாயிலாக 1,000 பொருள்கள் வரை விற்பனை செய்ய மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தங்கள் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கும் ஏதுவாக இந்த மின்- வணிகத்தளத்தை பயன்படுத்த அதிகமான விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படுவதாக விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
எனினும், இந்த மின் வர்த்தகத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் வணிகம் மீது முழு ஈடுபாடு உள்ளவர்களாக இருக்க வேண்டும். தங்கள் பொருள்கள் தற்காலிகமாக அல்லாமல் நீண்ட கால அடிப்படையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆடர்களைப் பெற்று அதனை ஒப்படைப்பதற்கு தேவையான அளவு கையிருப்பு இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள விஸ்மா பி.கே.பி.எஸ். தலைமையத்தில் அக்ரோசெல் மற்றும் அக்ரோ ஷோப் ஆகிய நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே, வர்த்தகர்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதில் உதவ தாங்கள் தயாராக உள்ளதாக அக்ரோசெல் தலைமை நிர்வாகி முகமது சபுவான் ரசாலி கூறினார்.