ஷா ஆலம், ஏப் 22– சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்கள் வாயிலாக அனைவரும் பயன்பெறுவதை தாம் உறுதி செய்ய விரும்புவதாக செமெந்தா மற்றும் செலாட் கிள்ளான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமிட் கூறினார்.
மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம், ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவுமிக்க அன்னையர் திட்டம் (கிஸ்) உள்பட மாநில அரசு அமல்படுத்திய திட்டங்களை மக்களிடம் கொண்டுச் செல்வதில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் சொன்னார்.
இத்திட்டங்கள் குறித்து பெரும்பாலான மக்கள் இன்னும் அறிந்திராததால் உதவி தேவைப்படும் பட்டியலில் இருந்து பலர் விடுபட்டுப் போவதாக அவர் தெரிவித்தார்.
காப்பார் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், கடந்த மே மாதம் முதல் செமெந்தா மற்றும் செலாட் கிள்ளான் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வருகிறார்.
இத்திட்டங்கள் தொடர்பான பிரசார நடவடிக்கைளின் பயனாக அதிக எண்ணக்கையிலானோர் உதவி நாடி தமது சேவை மையத்திற்கு வருவதாக அவர் கூறினார்.
உதவி தேவைப்படுவோரிடமிருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதில் செமெந்தா மற்றும் செலாட் கிள்ளான் சட்டன்றத் தொகுதிகள் வாயிலாக பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.