ஷா ஆலம், ஏப் 23– கத்ரி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட செம்பனை எண்ணெய் லோரி சம்பந்தப்பட்ட விபத்தினால் நீர் வளங்களுக்கு ஏற்படக்கூடிய மாசுபாட்டை எதிர் கொள்வதற்கு லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் தயார் நிலையில் உள்ளது.
அந்த லோரியிலிருந்து கசிந்த எண்ணெய் நெடுஞ்சாலையின் கால்வாய்கள் வழியே வழிந்தோடிய நிலையில் சுங்கை பூலோ ஆற்றில் கலப்பதற்கு முன்னர் இரு இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.
அந்த எண்ணெய் கசிவினால் கடுமையான மாசுபாடு ஏற்படவில்லை என்பது தாங்கள் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் தெரியவந்துள்ளது என்றும் அது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
கத்ரி நெடுஞ்சாலையின் 15.9வது கிலோமீட்டர் பகுதியில் அந்த எண்ணெய் லோரி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக லோரியிலிருந்து எண்ணெய் நெடுஞ்சாலையின் கால்வாய் வழியே வழிந்தோடியது. சம்பந்தப்பட்ட லோரி நிறுவனப் பணியாளர்கள் அப்பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் காரணமாக மாநிலத்தின் நீர் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை சமாளிக்க லுவாஸ் நிறுவனத்தின் விரைவு பணிக்குழு தயார் நிலையில் உள்ளது.