ஷா ஆலம், ஏப் 28– உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு நேற்று இரவு வரை நேற்று வரை 1,271 வர்த்தக மையங்கள் மீது விலை கட்டுப்பாட்டுச் சோதனையை மேற்கொண்டது.
அந்சோதனை நடவடிக்கையின் போது ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் விலையேற்றம் தொடர்பான மூன்று புகார்கள் பெறப்பட்டதாக அதன் இயக்குநர் முகமது ஜிக்ரில் அஸான் ஆலாம் கூறினார்.
பொருள்களின் விலையேற்றத்தைக் கண்காணிப்பது மற்றும் பெருநாள் காலத்தையொட்டி அமல் படுத்தப்பட்ட விலை உச்சவரம்பு திட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இச்சோதன மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
இச்சோதனையின் போது குறைவான புகார்களே கிடைத்துள்ளதை கருத்தில் கொள்ளும் பெரும்பாலான வர்த்தகர்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவருகிறது என்றார் அவர்.
விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை வர்த்தகர்கள் கடைபிடிப்பது குறித்து தாங்கள் மனநிறைவு கொள்வதோடு பயனீட்டாளர்களின் நலன் கருதி இந்த விதிமுறைகளை அவர்கள் தொடர்ந்து கடைபிடிப்பர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ஓத்மானில் உள்ள சந்தையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளரகளிடம் அவர் தெரிவித்தார்.
அதிக விலையில் பொருள்களை விற்கும் வணிகர்கள் தொடர்பான புகார்களை பயனீட்டாளர் விவகார அமைச்சின் சமூக ஊடங்கள் வாயிலாக தங்களுக்கு தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.