பாங்கி, மே 9– சிலாங்கூர் மாநில அரசினால் நடத்தப்படும் இலவச கோவிட்-19 பரிசோதனைகளில் பங்கேற்று பயனடையுமாறு சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளிலும் இந்த பரிசோதனை இயக்கம் நடத்தப்படுவதால் பொதுமக்கள் அந்த பரிசோதனையைத் தவிர்ப்பதற்கு எந்த காரணமும் கிடையாது என்று அவர் கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கம் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் மாநிலம் முழுவதும் இலவசமாக நடத்தப்படுகிறது. ஆகவே, இதில் பங்கேற்காமலிருப்பதற்கு எந்த காரணமும் கூறக்கூடாது என்றார் அவர்.
பொது இடங்களுக்குச் செல்லும் போது எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டும் சில தரப்பினரின் போக்கு குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
நோய்த் தொற்று அதிகமாகி வரும் நிலையில் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் அலட்சியமா? அல்லது ஆணவமா? என்று தெரியவில்லை.12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களை பொது இடங்களுக்கு அவர்கள் இன்னும் அழைத்துச் செல்கின்றனர் என்று அவர் வேதனையுடன் கூறினார்.
இதனிடையே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் கேட்டுக் கொண்டார்.