கோலாலம்பூர், மே 21- கோவிட்-19 தடுப்பூசியில் குறைவான மருந்தளவே உள்ளதாக எழுந்துள்ள புகார் மீது சி.ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை அமைப்பு விரிவான அளவில் விசாரணை மேற்கொள்ளும். அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியில் வழக்கமான அளவைவிட 0.5 மில்லி லிட்டர் மருந்தளவு குறைவாக உள்ளது தொடர்பில் தாங்கள் புகார்களை பெற்றுள்ளதாக அந்த அமைப்பு கூறியது. இங்குள்ள உலக வாணிப மையத்தில் செயல்படும் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் இந்த சம்பவம் கண்டறியப்பட்டதாக அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. குறைவான மருந்தளவு கொண்ட தடுப்பூசியை பெற்றதாக கூறப்படும் இரு நபர்களை தாங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது. நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டை அல்லது விதிமுறைகளை மீறும் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க தமது தரப்பு தயங்காது என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.