D
HEALTHPBT

கோம்பாக் போலீஸ் தலைமையகத்தில் கைதி மரணம்

கோலாலம்பூர், மே 21– மிரட்டல் புகார் தொடர்பில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட இந்திய ஆடவர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக மரணமடைந்தார். இச்சம்பவம் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று காலை நிகழ்ந்தது.

ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக 43 வயதுடைய அந்த ஆடவர் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவே கூறினார்.

தேடப்படும் அந்த நபரை போலீசார் தாமான் செலாயாங் பாருவிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் எதிரே உள்ள பாதுகாவலர் சாவடியில் நேற்று காலை 11.20 மணியளவில் கைது செய்ததாக அவர் சொன்னார்.

அந்த ஆடவர் பின்னர் காலை 11.40 மணியளவில் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டார். குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருந்த போது அந்நபருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்காக உடனடியாக செலாயாங் மருத்துவமனையை தொடர் கொண்டோம் என்றார் அவர்.

சிறிது நேரத்தில் செலாயாங் மருத்துவமனையிலிருந்து மருத்துவ பணியாளர்கள் அம்புலன்ஸ்சில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவ்வாடவரை பரிசோதித்த மருத்துவ பணியாளர்கள் அவர் இறந்து விட்டதை பிற்பகல் 12.30 மணியளவில் உறுதிப்படுத்தினர் என்று அவர் மேலும் சொன்னார்.

மரணமடைந்த அந்த ஆடவர் மீது போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பில் இரு குற்றப்பதிவுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாவரலாக பணிபுரியும் அந்த ஆடவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தது போலீசாரின் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :