ஷா ஆலம், மே 22– தீபகற்ப மலேசியா மற்றும் லவுபானில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மட்டுமே மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய உத்தரவு இம்மாதம் 25ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
அனைத்து விதமான உணவு விற்பனை மையங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் நீங்கலாக இதர இடங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தில் பொருளாதாரத் துறைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த புதிய விதிமுறையின் கீழ் 80 விழுக்காட்டு அரசாங்கம் ஊழியர்கள் அதாவது சுமார் 750,000 பேர் வீட்டிலிருந்து வேலை செய்வர் என்று அவர் சொன்னார்.
தனியார் துறையைப் பொறுத்த வரை 40 விழுக்காட்டினர் அல்லது 61 லட்சம் பேர் வீட்டிலிருந்து பணிகளைக் கவனிப்பர்.
பொது போக்குவரத்து வாகனங்களில் 50 விழுக்காட்டுப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று இஸ்மாயில் தெரிவித்தார்.