ஷா ஆலம், மே 28– பொது மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணியை விரைவுபடுத்தும்படி பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
விநியோகத்தில் இடையூறு உள்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கும் காரணத்தால் பைசர், அஸ்ட்ராஸேனேகா மற்றும் சைனோவேக் போன்ற தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தில் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியவில்லை என்று அக்கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் கூறியது.
அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியின் மருந்தளவும் போதுமானதாக இல்லை. இது தவிர, அகப்பக்கத்தை மேம்படுத்துவதற்கு ஏழு கோடி வெள்ளியை செலவிட்ட போதிலும் தடுப்பூசியைப் பெறுவதற்கு இணையம் வழி பதிவு செய்வதில் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்று அறிக்கை ஒன்றில் அது தெரிவித்தது.
கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு மற்றும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
தடுப்பூசித் திட்டத்தை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக சினோபார்ம், ஸ்புட்னிக் வி, மோடெர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு உடடினயாக அனுமதி வழங்கும்படி தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பையும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது.