ஷா ஆலம், ஜூன் 1- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பெமெர்காசா எனப்படும் மக்களையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் வியூகத் திட்டத்திற்கு கூடுதலாக 4,000 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுமார் 500 கோடி வெள்ளி அரசாங்கத்தின் நேரடி நிதியளிப்பை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
பொருளாதாரத் துறைகள் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் மக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் செலவுகளை செய்வதற்கு நமது நிதி நிலை மிகவும் வரையறைக்குட்பட்டதாக உள்ளது என்பதை இங்கு நான் வெளிப்படையாக தெரிவித்துதான் ஆக வேண்டும்.
எனினும், மக்கள் நலன் மீது கொண்ட அக்கறை காரணமாக மக்களின் உயிரும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் சமஅளவிலான முக்கியத்துவத்தை வழங்க இயன்ற வரை முயன்று வருகிறோம் என்றார் அவர்.
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தையொட்டி மக்களுக்கு உதவித் திட்டங்களை அறிவித்த போது பிரதமர் இவ்வாறு கூறினார்.