ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 81,000 பேர் பங்கேற்பு- 3,000 பேருக்கு நோய்த் தொற்று உறுதி

சிப்பாங், ஜூன் 2– சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் இதுவரை 81,000 பேர் பங்கு கொண்டுள்ளனர்.

இந்த இயக்கத்தின் போது ஆண்டிஜென் (ஆர்.டி.கே.-ஏஜி) விரைவு சாதனம் வழி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 3,000 பேருக்கு நோய்த் தொற்று அபாயம்  இருப்பது கண்டறியப்பட்டதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டவர்களில்  சுமார் 70 விழுக்காட்டினர் 20 முதல் 40 வயது வரையிலானவர்களாவர். அவர்களுக்கு அடுத்த நிலையில் சிறார்களும் மூத்த குடிமக்களும் உள்ளனர் என்றார் அவர்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட பலருக்கு அந்நோய்க்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த பரிசோதனை இயக்கத்திற்கு அவர்கள் வந்ததன் மூலம் பிறருக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் முன்கூட்டியே தடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

டிங்கில் சட்டமன்றத் தொகுதி நிலையில் இங்குள்ள சைபர் ஜெயா, செரின் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் அறிவித்த மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இந்த பரிசோதனை இயக்கத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை பரிசோதனைக்கு வருவோரின் எண்ணிக்கை புலப்படுத்துகிறது என்றும் அவர் சொன்னார்.

இன்று நண்பகல் 12.00 மணி வரை டிங்கில் தொகுதியில் 5,409 பேரும்  சுங்கை பீலேக் தொகுதியில் 832 பேரும் இந்த பரிசோதனையில் பங்கு கொள்ள பதிவு செய்திருந்தனர் என்றார் அவர்.


Pengarang :