ஷா ஆலம், ஜூன் 14– சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம் வெற்றியடைவதை உறுதி செய்ய தீவிர பிரசார இயக்கம் மேற்கொள்வது அவசியம் என்று தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சா கூறினார்.
வரும் சனிக்கிழமையன்று தொடங்கவிருக்கும் இந்த பரிசோதனை இயக்கத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் இலக்காக கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு இந்த இலவச பரிசோதனை குறித்த விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு அதிக அளவில் விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கத்தில் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம். ஆகவே, இந்த இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய பரிசோதனை மையங்களில் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுவது அவசியம் என்றார் அவர்.
இதனிடையே, கோம்பாக் செத்தியா தொகுதியில் உள்ள மூத்த குடிமக்களை பரிசோதனை மையத்திற்கு அழைத்து வருவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹிம் காஸ்டி கூறினார்.
மூன்றாம் கட்ட கோவி-19 பரிசோதனை இயக்கம் வரும் சனிக்கிழமை தொடங்கி மேற்கொள்ளப்படும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறியிருந்தார்.