ஷா ஆலம், ஜூலை 1– சிலாங்கூரிலுள்ள எம்40 பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினர் சிலாங்கூர் அரசு வழங்கும் இணைய சேவை உதவித் தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்.
எஸ்.ஐ.எஸ்.எம்.40 எனப்படும் நடுத்தர வருமானம் பெறுவோரை இலக்காக கொண்ட இத்திட்டதிற்கு http://www.sism40.com.my/. எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.
குடும்ப பேக்கேஜ், தனிநபர் பேக்கேஜ் மற்றும் அடிப்படை பேக்கேஜ் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் எட்டு தொகுப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மாதம் 10 முதல் 30 வெள்ளி வரை ஓராண்டிற்கு கட்டணச் கழிவை பெற முடியும் என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் கூறியது.
கூடுமான வரை அதிக எண்ணிக்கையிலானோர் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளுடனும் அணுக்கமாக செயலாற்றி வருகிறது என்று அது தெரிவித்தது.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த இணைய சேவைக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் எம்.பி.ஐ. மற்றும் டெலிகோம் மலேசியாவுடன் கூட்டாக மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.
கடந்த மாதம் மந்திரி புசார் வெளியிட்ட கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பில் இந்த திட்டமும் இடம் பெற்றுள்ளது.
இது தவிர, சிறு வணிகர்கள், மாணவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், டாக்சி ஓட்டுநர்கள் மூத்த குடிமக்கள் உள்பட 70,000 பேர் பயன்பெறக் கூடிய சிலாங்கூர் இணைய தரவு திட்டத்தையும் மந்திரி புசார் அறிவித்திருந்தார்.