ஷா ஆலம், ஜூலை 3- இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள 50 மைதானங்கள் மற்றும் விளையாட்டு மையங்களை தரம் உயர்த்த சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் 24 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
பொது மக்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய உகந்த சூழலை உருவாக்கும் நோக்கில் மாநில அரசு இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.
முக்கிம் எனப்படும் துணை மாவட்டங்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள கால்பந்து திடல்கள், புட்சால், செப்பாக் தக்ராவ், வலைப்பந்து மைதானங்கள் மற்றும் விளையாட்டு மையங்களை சீரமைப்பதை இத்திட்டம் இலக்காக கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு இறுதிக்குள் ஐம்பது விழுக்காட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எனினும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தைப் பொறுத்து அவற்றின் பணித் தன்மை அமையும் என்றார் அவர்.
சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணிகளை இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.