புத்ரா ஜெயா, ஜூலை 3– வரும் திங்கள்கிழமை தொடங்கி நாட்டிலுள்ள ஐந்து மாநிலங்கள் தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு மாறவுள்ளன.
தேசிய மீட்சித் திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த ஐந்து மாநிலங்களும் அடைந்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ருள் துங்கு அஜிசுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை 4,000க்கும் குறைய வேண்டும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கட்டில்களின் பயன்பாடு மிதமான அளவில் இருக்க வேண்டும் மற்றும் பத்து விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகள் தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு மாறுவதற்கான அளவு கோளாக கொள்ளப்படுகின்றன.
இரண்டாம் நிலை மீட்சித் திட்டத்தின் அமலாக்கத்தின் போது ஆசிரியர் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர்த்து மற்றவர்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்மாயில் சொன்னார்.