கிள்ளான் பள்ளத்தாக்கு மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு 85% எட்டியது
கோலாலம்பூர், ஜூலை 4- கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு 85 விழுக்காட்டை தாண்டி விட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
மருத்துவமனைகளில் குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கூடுதல் கட்டில்கள் தேவைப்படுவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு உடனடி மாற்றுத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாக அவர் சொன்னார்.
நமது எதிர்பார்ப்பை மீறி அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் வேறு மருத்துவமனைகளிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு குறிப்பாக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நோயாளிகளை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
கோலாலம்பூர் மருத்துவமனை அதிகமான கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கோவிட்-19 அல்லாத நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை விரிவுபடுத்துவதும் இதில் அடங்கும் என்றார் அவர்.
மேலும் அதிகமான கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லாத வார்டுகளில் கட்டில்கள் மற்றும் செயற்கை சுவாசக் கருவில் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.