கோலாலம்பூர், ஜூலை 10- பயனீட்டாளர் புகார்களுக்குத் தீர்வு காணாவிட்டால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) எச்சரித்துள்ளது.
தர மற்றும் சேவைக்கான நிரந்தர விதிகளுக்கேற்ப குறிப்பிட்ட தொகை அந்நிறுவனங்களுக்கு அபராதமாக விதிக்கப்படும் என்று எம்.சி.எம்.சி. தலைவர் டாக்டர் ஃபாடுல்லா சுஹாய்மி கூறினார்.
தரமற்ற சேவையை வழங்கிய குற்றத்திற்காக தாங்கள் தண்டிக்கப்படுவதை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விரும்பாது. காரணம், தனது வாடிக்கையாளர்களை நிர்வகிக்கும் ஆற்றலை அந்நடவடிக்கை பாதிக்கும் என்றார் அவர்.
எனினும், இத்தகைய நடவடிக்கைளின் வாயிலாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உயர்ந்த பட்ச சேவையை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று இயங்கலைவாயிலாக நடைபெற்ற எம்.சி.எம்.சி.யின் மூன்றாம் காலாண்டு அறிக்கை மீதான விளக்கமளிப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் பேசிய ஃபாடுல்லா, தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட சேவைத் துறைகளில் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்ப்பது கடினம் என்றார்.
நாம் பயன்படுத்தும் கணினியைக் கூட அவ்வப்போது மறுபடியும் உயிர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதுபோல்தான் தொலைத் தொடர் துறையிலும் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.
தொலைத் தொடர்பு சேவை தொடர்பில் புகார் கிடைத்தவுடன் தமது தரப்பு அதனை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் என்பதோடு அதனை சரி செய்வதற்கும் கால அவகாசம் வழங்கும் என அவர் கூறினார்.