கோலாலம்பூர், ஜூலை 14– நாட்டில் கடந்த இரு தினங்களாக கோவிட்-19 தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று 424,541 பேர் தடுப்பூசி பெற்ற வேளையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 421,479 ஆக இருந்தது.
நேற்று 260,286 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 164,255 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியையும் பெற்றதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஆடாம் பாபா தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்கள் எண்ணிக்கையில் 52,551 பேருடன் சரவா முதலிடம் வகிக்கும் வேளையில் 25,696 பேருடன் இரண்டாவது நிலையில் சிலாங்கூர் உள்ளதாக அவர் சொன்னார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 1 கோடியே 22 லட்சத்து 12 ஆயிரத்து 730 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.