ஷா ஆலம், ஜூலை 18- மெலவாத்தி அரங்கிலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தில் (சி.ஏ,சி,) நெரிசலைத் தவிர்க்கவும் சோதனை நடவடிக்கை சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் ஷா ஆலம் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் அதிகாலை 6.00 மணி முதல் அங்கு பணியில் ஈடுபட்டுத்தப்படுவார்கள்.
அந்த மையம் காலை 9.00 மணிக்கு திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் காலை 7.00 மணிக்கே அங்கு கூடிவிடுவதால் அமலாக்கப் பிரிவினர் முன்கூட்டியே அங்கு பணியில் ஈடுபட வேண்டியுள்ளதாக மாநகர் மன்றத்தின் அமலாக்க பிரிவு அதிகாரி முகமது சுக்ரி ஷாபியி கூறினார்.
ஒரு சிலர் வாகனங்களை அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்துவதால் ஏற்படக்கூடிய நெரிசலை தவிர்க்க விரும்புகிறோம் .மேலும், தவறான வரிசையில் நிற்பதால் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க நோயாளிகள் நிற்க வேண்டிய சரியாக தடங்களை அடையாளம் காட்டும் பணியிலும் ஈடுபடுகிறோம் என்றார் அவர்.
அனைவரின் பாதுகாப்பு கருதி தாங்கள் ஒலிபெருக்கி வாயிலாக நோயாளிகளுக்கு வழிகாட்டுதலையும் உத்தரவுகளையும் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.