ஷா ஆலம், ஜூலை 24– உலுயாம் லாமா சுகாதார மையத்தில் செயல்பட்டு வரும் உலு சிலாங்கூர் மாவட்ட கோவிட்-19 மதிப்பீட்டு மையம் (சி.ஏ.சி.) வரும் திங்கள் கிழமை பத்தாங் காலி சமூக மண்டபத்திற்கு மாற்றப்படும்.
நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக உலுயாம் லாமா மதிப்பீட்டு மையத்தில் ஏற்படும் நெரிசல் தொடர்பில் பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட சுகாதார இலாகா கூறியது.
புதிய மையம் பத்தாங் காலி தேசிய பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளதாக அந்த இலாகா வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
அந்த சி.ஏ.சி. மையத்தில் வாகன நிறுத்துமிட வசதி இல்லாதது மற்றும் தற்காலிக கூடாரங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தொடர்பில் பொது மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக புகார் அளித்து வந்தனர்.
கோவிட்-19 நோயாளிகளை பரிசோதிப்பதற்காக சிலாங்கூர் முழுவதும் 34 சி.ஏ.சி. மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகடிமான் முன்னதாக கூறியிருந்தார்.