ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறதா? அரசாங்கம் மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை 24- இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என அரசாங்கம் கூறியுள்ளது.

அத்தகைய அட்டைகளை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்பதோடு ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரமாகவும் அது ஏற்றுக் கொள்ளப்படாது என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக அமைச்சின் விரைவு நடவடிக்கை குழு கூறியது.

“MY Covid-19 Vaccination Badge” எனும் அந்த அடையாள அட்டையை வெளியிடுவதற்கு அமைச்சரவையின் அனுமதிக்காக தாங்கள் காத்திருப்பதாக அது தெரிவித்தது.

பொது மக்கள் இப்போதைக்கு மைசெஜாத்ரா செயலியில் உள்ள இலக்கவியல்  சான்றிதழ் மற்றும் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சு மற்றும் கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத குழு ஆகியவற்றின் அகப்பக்கங்களை நாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மைசெஜாத்ரா செயலியிலிருந்து அச்சடிக்கப்பட்டதாக கூறப்படும் தடுப்பூசி பெற்றவரின் பெயர், தேதி, தடுப்பூசியின் ரகம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அட்டையை பெண்மணி ஒருவர் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படுவது தொடர்பில் அமைச்சு இந்த விளக்கத்தை அளித்தது.


Pengarang :