ஷா ஆலம், ஜூலை 29- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் தெளிவான எதிர்கால இலக்கை தீர்மானிப்பதற்கு ஏதுவாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பதற்றம் நிறைந்த தற்போதைய சூழலில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயல்படுவது அவசியம் என்று பாங்கி தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங் கூறினார்.
முன்பு இல்லாத ஒரு மாறுபட்ட இலக்கை வரைவதற்கான கட்டாயத்தில் நாம் உள்ளோம். தற்போதைய அசாத்திய சூழலில் அசாத்தியமான தலைமைத்துவம் இந்த மாண்புமிகு அவைக்கு தேவைப்படுகிறது என்றார் அவர்.
தற்போதைய அரசாங்கத்தின் செயலாக்கத்தை சரிபார்த்து சமன் செய்யும் பொறுப்பை நாங்கள் ஆற்றவில்லை என்பது இதன் பொருளல்ல. மாறாக, உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று பிரச்னைக்கு தீர்வு காண்பது தற்போதைக்கு மிக முக்கியம் என்று அவர் சொன்னார்.
14வது நாடாளுமன்றத்தின் 3ஆம் தவணைக்கான சிறப்பு கூட்டத் தொடரில் உரையாற்றிய போது ஜசெக உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.
ஓ.சி.எஸ். எனும் திட்டத்தில் மத்திய அரசும் சிலாங்கூர் மாநில அரசும் ஒன்று பட்டு செயல்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இந்த ஒத்துழைப்பின் வாயிலாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை எட்டியது என்றார்.
தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் தேதி கிடைக்காதவர்கள் ஆகஸ்டு முதல் தேதிக்குப் பின்னர் தடுப்பூசி பெற நேரடியாக தடுப்பூசி மையங்களுக்குச் செல்வதற்குரிய வாய்ப்பினை இத்திட்டம் ஏற்பட்டுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.