ஷா ஆலம், ஆக 3- இவ்வாண்டு இறுதிக்குள் சிலாங்கூரிலுள்ள அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றிருப்பதை உறுதி செய்ய மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி இயக்கத்தின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார். நேற்று வரை 45 லட்சத்து 80 ஆயிரம் பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 12 லட்சத்து 80 ஆயிரம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகவும் பெற்றுள்ளதாக அவர் சொன்னார். பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்துடன் சிலாங்கூர் அரசு நல்கி வரும் ஒத்துழைப்பு காரணமாக மாநிலத்தில் தடுப்பூசி இயக்கம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் காரணத்தால் காலப்போக்கில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை குறையும் என அவர் தெரிவித்தார். செல்வேக்ஸ் திட்டம் குறித்து கருத்துரைத்த அவர், இத்திட்டத்தின் கீழ் பலர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி பெறுவதில் யாரும் விடுபடக் கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என்றார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/07/vac-mobile-4-960x640.jpg)