கோலாலம்பூர், ஆக 6- மோடேர்னா வகை தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான நிபந்தனையுடன் கூடிய அனுமதியை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரத் தரப்பு தனது 362வது கூட்டத்தில் அளித்துள்ளது.
அந்த தடுப்பூசிக்கான பதிவு அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் ஸூலிக் பார்மா சென். பெர்ஹாட் நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரோவி பார்மா இண்டஸ்ரியல் செர்விசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்த தடுப்பூசியை நிபந்தனையுடன் அங்கீகரிப்பதற்கு தரம், பாதுகாப்பு மற்றும் செயல் திறன் மீதான தகவல்கள் தேவைப்படுகின்றன. மேலும் இந்த தடுப்பூசி ஆகக்கடைசி தரவுகளின் அடிப்படையில் அடிக்கடி மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் ஆக்கத் தன்மையை தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு அதிகாரத் தரப்பின் வாயிலாக உறுதி செய்யும் பணியை சுகாதார அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.