ஷா ஆலம், ஆக 5- சிலாங்கூர் மாநிலத்தில் 33 லட்சத்து 80 ஆயிரம் பேர் அதாவது 71.2 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மொத்தம் 48 லட்சத்து 90 ஆயிரம் தடுப்பூசிகள் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாகவும் 225,628 தடுப்பூசிகள் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தின் மூலமாகவும் செலுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும் அதிக கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலமாகவும் சிலாங்கூர் இருந்த போதிலும் தடுப்பூசியைச் செலுத்துவதில் அது விரைவான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில அரசு செல்வேக்ஸ் கம்யூனிட்டி எனப்படும் பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 500,000 தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம 250,000 பேர் பயன் பெற முடியும்.
அதே சமயம், அந்நிய நாட்டினர் உள்பட தொழிற்சாலை ஊழியர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்தின் வாயிலாக 20 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.