கோலாலம்பூர், ஆக 8- தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் அதற்கு மேல் உள்ள மாநிலங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் வரும் செவ்வாய்க் கிழமை தொடங்கி மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை கடக்கலாம்.
எனினும், தொலைவில் இருக்கும் கணவர் அல்லது மனைவியை சென்று காண்பது மற்றும் 18 வயதுக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகளை பெற்றோர்கள் சந்திப்பது ஆகிய காரணங்களாக மட்டுமே எல்லை கடக்க முடியும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
பைசர், ஆஸ்ட்ராஸேனேகா மற்றும் சினோவேக் தடுப்பூசி பெற்றவர்கள் 14 நாட்களுக்குப் பிறகும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் மற்றும் கேன்சினோ போன்ற ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் 28 நாட்களுக்குப் பிறகும் மாவட்ட அல்லது மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுவர் என்று அவர் மேலும் சொன்னார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் வழங்கப்பட்ட தளர்வுகள் வருமாறு-
– ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் செவ்வாய்க் கிழமை தொடங்கி செல்லலாம். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான மைசெஜாத்ரா சான்றிதழை காட்ட வேண்டும். மேலும், கூடல் இடைவெளியை கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது போன்ற எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
– மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடக்கலாம்
– உணவகங்கள் அமர்ந்து உணவு அருந்தலாம்
– தனியாக மற்றும் தொடுதல் இல்லாத விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்
– ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்தேய் தங்குமிடம் சம்பந்தப்பட்ட சுற்றுலா நடவடிக்கைகளை மாநிலத்திற்குள் மேற்கொள்ளலாம்.