கோலாலம்பூர், ஆக 15- “மருத்துவமனையில் முன்பு உயிருக்கு போராடும் நோயாளிகளின் கட்டில்களுக்கு அருகிலும் அவசர சிகிச்சைப் பிரிவிலும் நடைபாதையிலும் பைகளில் மூடப்பட்ட உயிற்றவர்களின் உடல்கள் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது அவ்வாறில்லாமல் வெறும் தரையை மட்டும் காண முடிகிறது.“
“கிள்ளான் பள்ளத்தாக்கில் நாங்கள் இப்போது அடர்ந்த இருளுக்கு மத்தியில் மெல்லிய ஒளிவட்டத்தைக் காண்கிறோம். அந்த ஒளி தெளிவற்றதாக இருந்தாலும் மிகுந்த நம்பிக்கையைத் தருவதாக உள்ளது“ என்று நடப்பு கோவிட்-19 நிலவரத்தை தனது முகநூலில் இவ்வாறு விவரிக்கிறார் கோலாலம்பூர் மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஹானா ஹாட்ஸ்ராமி.
இந்த நம்பிக்கையூட்டும் நேர் மறையான மாற்றங்களுக்கு தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணம் என நாம் நம்புவதாக அவர் கூறுகிறார்.
அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் கடுமையான நிலையிலுள்ள கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருவதாக தனது பதவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு, தீவிர சிகிச்சைப் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். நோயாளிகள் பெயரை எழுத இடமின்றி புதிது புதிதாக தாள்களைச் சேர்க்க வேண்டியதாக இருக்கும். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. தாள்களில் இடங்கள் காலியாகவே உள்ளன என அவர் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் முதல் குறையத் தொடங்கிய வேளையில் மருத்தவமனைக்கு வரும் உள்நாட்டினரின் எண்ணிக்கையும் கடந்த வாரம் தொடங்கி சரியத் தொடங்கியுள்ளன என்றார் அவர்.
கடந்த வாரம் முதல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் கோவிட்-19 நோயாளிகளில் பெரும்பாலோர் அந்நிய நாட்டினர் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அண்மைய காலமாக குறைந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.