கோலாலம்பூர், ஆக 15– தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் வர்த்தகம் மற்றும் விநியோகம் சம்பந்தப்பட்ட 11 பொருளாதார நடவடிக்கைகள் நாளை தொடங்கி செயல்பட அனுமதிக்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
கார் கழுவும் மையங்கள், மின்னியல் மற்றும் மின்சார பொருள் விற்னை நிலையங்கள், வீட்டு மற்றும் சமையல் தளவாடப் பொருள் கடைகள், வாகன துணை பாக விற்பனை நிலையங்கள், கார் விற்பனை நிலையங்கள், பாசார் பாகி, பாசார் தானி, ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், முடி திருத்தும் நிலையங்கள், முக ஒப்பனை நிலையங்கள் ஆகியவை நாளை தொடங்கி செயல்படலாம் என அவர் சொன்னார்.
ஜவுளி நிலையங்கள், நகைக்கடைகள், முடி திருத்தும் நிலையங்கள் போன்ற துறைகளுக்கு கூடுதல் சுகாதார எஸ்.ஒ.பி. நடைமுறைகளை அமல்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பணியின் போது கையுறை அணிவது, ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமிடையிலான பணி நேரத்தை கட்டுப்படுத்துவது, உடைகளை அணிந்து பார்க்கும் அறைகள் பயன்படுத்தப்படுவதை தடுப்பது போன்ற எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன. இந்த விதிமுறைகள் கடுமையாக இருந்தாலும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமல்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாளை தொடங்கி செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட வர்த்தக மையங்கள் வாடிக்கையாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மைசெஜாத்ரா செயலியில் உள்ள தடுப்பூசி சான்றிதழை வாடிக்கையாளர்கள் காட்டுவது அவசியம் என்றார் அவர்.
இரு முறை செலுத்தப்படும் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற 14 நாட்களுக்குப் பிறகும் ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் தடுப்பூசியைப் பெற்றவர்கள் 28 நாட்களுக்குப் பிறகும் இத்தகைய மையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்