ஷா ஆலம், ஆக 23- சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இக்கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.
இந்த கூட்டத் தொடரில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேன்மை தங்கிய சுல்தான் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை களைவதற்கான மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
இது தவிர, நோய்த் தொற்றுப் பிரச்னையை எதிர்கொள்ளக்கூடிய திட்டங்கள், பொருளாதார நடவடிக்கைகளை வலுப்பெறச் செய்யும் திட்டங்கள் மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கான அடித்தளமாக விளங்கும் மாநிலத்தின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்று அவர் சொன்னார்
இது வெறும் சிறப்புக் கூட்டமாக அல்லாமல் கேள்வி பதில், விவாதங்கள் உள்பட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வழக்கமான கூட்டத் தொடராக விளங்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் (எஸ்.ஒ.பி.) இக்கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் அமிருடின் தெரிவித்தார்.
இக்கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைத்து ஊடகவியலாளர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பது உறுதி செய்யப்படும் என்பதோடு ஒவ்வொரு நாளும் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு உமிழ்நீர் மூலம் கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.