ஷா ஆலம், ஆக 27- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி நடத்துநர்களுக்கு வரிக் குறைப்பு அல்லது வரி ஒத்தி வைப்பு சலுகையை வழங்குவது குறித்து சிலாங்கூர் அரச பரிசீலித்து வருகிறது.
அத்தரப்பினருக்கு உதவுவதற்கு மாநில அரசு ஆலோசித்து வரும் திட்டங்களில் மனை வரி, நில வரி மற்றும் பெர்மிட் வரி செலுத்துவதில் சில சலுகைகளை வழங்குவதும் அடங்கும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இந்த வரிச் சலுகையை பெறும் ஹோட்டல்களின் எண்ணிக்கை தொடர்பில் மாநில அரசு ஊராட்சி மன்றங்களுடன் பேச்சு நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
மனை வரி மற்றும் நில வரிச் சலுகை வழங்குவதால் ஊராட்சி மன்றங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை நாம் ஆராய வேண்டியுள்ளது. முழுமையான வரிச்சலுகையை வழங்கும் பட்சத்தில் ஊராட்சி மன்றங்களின் வரி வசூலிப்பில் கடும் விளைவுகள் ஏற்படும் என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பான விரிவான பரிந்துரை அறிக்கை ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைளின் மீட்சிக்கான திட்டங்கள் தொடர்பில் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
சுற்றுலாத் துறையின் மீட்சிக்காக கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக கடந்தாண்டில் 55.1 லட்சம் வெள்ளியும் இவ்வாண்டில் 25.5 லட்சம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக ஆறு உதவித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுலாத் துறையினருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கக்கூடிய நிதியுதவி மற்றும் சுற்றுலா பற்றுச் சீட்டு திட்டம் ஆகியவையும் அதில் அடங்கும் என்றார் அவர்.