ஷா ஆலம், ஆக 27- வேலை வாய்ப்புச் சந்தை திட்டத்தை இவ்வாண்டில் தொடர்வதில் சிலாங்கூர் அரசு உறுதியாக உள்ளது.
மாநிலத்தில் தற்போது 4.5 விழுக்காடாக இருக்கும் வேலையில்லாதோர் எண்ணிக்கையை 2.5 விழுக்காடாக குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இளையோர் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
தேசிய மீட்சித் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்த்தப்படும் பட்சத்தில் பெட்டாலிங், கிள்ளான், சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், சிப்பாங் ஆகிய மாவட்டங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலை வாய்ப்புச் சந்தை இவ்வாண்டில் தொடரப்படும் எனறு அவர் சொன்னார்.
இளையோர் மத்தியில் காணப்படும் வேலையில்லாப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் முனைப்பு காட்டும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
இறைவன் அருளால் தேசிய மீட்சித் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்த்தப்படும் பட்சத்தில் இத்தகைய வேலை வாய்ப்புச் சந்தைகளை நாம் நேரடியாக நடத்த இயலும். அவ்வாறு நடத்தப்படுவதற்கு சாத்தியம் இல்லாவிடில் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் முதலாளிகளை ஓரிடத்தில் கூட்டி இயங்கலை வாயிலாக வேலை வாய்ப்பு சந்தையை நடத்துவதற்கான சாத்தியம் ஆராயப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை தற்போது 4.5 விழுக்காடாக உள்ளது. அதனை பழையபடி 2.5 விழுக்காடாக குறைக்க விரும்புகிறோம் என்று இளையோருக்கு உதவும் கடப்பாடு எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் பேசிய போது அவர் தெரிவித்தார்.
கடந்த 23 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய மேன்மை தங்கிய சுல்தான் கடந்த 2019இல் 3.9 விழுக்கடாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் கடந்தாண்டில் 4.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் மாநிலத்தில் பொருளாதாரம் சற்று மீட்சி கண்ட போதிலும் கடந்த ஜூன் மாதவாக்கில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 40,600 ஆக உயர்ந்து 4.8 விழுக்காட்டை எட்டியதாக அவர் குறிப்பிட்டார்.