ஷா ஆலம், ஆக 28– கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவும் வகையில் ஊராட்சி மன்றங்களுக்கு சொந்தமான கடைகளுக்கு விதிக்கப்படும் வாடகையை மறு ஆய்வு செய்யும்படி மாநில அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சிறு வணிகர்களின் வருமான பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.
நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஊராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்திருக்கும் வணிகர்கள் மீது மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களுக்கு குறிப்பாக சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் கித்தா சிலாங்கூர் திட்டத்தில் அத்தரப்பினருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை செய்வதற்கான சாத்தியத்தையும் மாநில அரசு ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டம் மாநில மக்கள் விரைந்து தடுப்பூசி பெறுவதில் ஆக்ககரமான பலனைத் தந்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறிய அவர், மத்திய அரசுக்கு தடுப்பூசி வழங்கி உதவும் அதே வேளையில் போதுமான கையிருப்பு நமது வசம் உள்ளதையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.