ஷா ஆலம், ஆக 30- கடந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 441 தொழிற்சாலைத் துறை வாயிலாக 2,245 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டை சிலாங்கூர் மாநிலம் பெற்றது.
அவற்றில் 1,043 கோடி வெள்ளி முதலீடு உள்நாட்டிலிருந்தும் 1,202 கோடி வெள்ளி முதலீடு வெளிநாடுகளிலிருந்தும் பெறப்பட்டதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் தெரிவித்தார்.
இந்த முதலீடுகளின் வாயிலாக 27,491 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டதாக மாநில சட்டமன்றத்தில் அவர் கூறினார்.
சிலாங்கூரில் முதலீடு செய்வதற்குரிய நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இன்வெஸ்ட் சிலாங்கூர் அமைப்பின் வாயிலாக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை நிலைக்குழுவின் வாயிலாக மாநில அரசு மேற்கொண்டது என அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பில் உலு பெர்ணம் உறுப்பினர் டத்தோ ரோஸ்ன் சோஹார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான தடை இன்னும் அமலில் உள்ள போதிலும் மாநிலத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இயங்கலை வாயிலாக பேச்சு நடத்தும் நடவடிக்கையில் இன்வெஸ்ட் சிலாங்கூர் ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.