ஷா ஆலம், ஆக 30- மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) முன்கூட்டியே அகற்றப்பட்டதற்கு மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கிடையே காணப்பட்ட அணுக்கமான ஒத்துழைப்பே காரணம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கை உரிய பலனைத் தந்துள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பி.கே.பி.டி. ஆணைகள் ஐந்து அல்லது எட்டு நாட்களுக்கு முன்னதாகவே அகற்றப்பட்டன. அனைத்து தரப்பினரையும் நாம் எவ்வாறு ஒன்றிணைத்தோம் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும் என்றார் அவர்.
சட்டமன்றத்தில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்வதில் மாவட்ட பேரிடர் மேலாண்மை பொறுப்பாளர்களின் பங்கேற்பு குறித்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மந்திரி புசார் இவ்வாறு கூறினார்.
டாமன்சாரா, டாமாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவும் கோத்தா டாமன்சாரா குகுசான் செமராக் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவும் கோம்பாக், தாமான் சமூட்ரா தீமோரில் மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பி.கே.பி.டி. ஆணை அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.