ஷா ஆலம், செப் 1- விவசாயத் துறையில் இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆண்டுக்கு 2,000 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய இளம் வேளாண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கு ஏதுவாக இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிபுணர்களைக் கொண்டு உரிய பயிற்சிகளை வழங்க இந்நடவடிக்கை துணை புரியும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்நோக்கத்திற்காக புக்கிட் சங்காங்கில் 30 ஏக்கர் நிலமும் சுங்கை ஆயர் தாவாரில் 120 ஏக்கர் நிலமும் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயத் துறை சார்ந்த தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஸ்மார்ட் சிலாங்கூர் அக்ரோ பார்க் திட்டம் சுங்கை பாஞ்சாங்கில் தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விவசாயத் துறையில் இளம் தொழில்முனைவோருக்கு பயிற்சியளிக்கும் கடப்பாட்டை பெரிய நிறுவனங்கள் கொண்டுள்ளதாக அவர் கூறினார். மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எந்த பயிற்சியுமின்றி தனியாக மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்களை காட்டிலும் இத்தகைய திட்டங்கள் அதிக பலனைத் தருவதை கடந்த கால வெற்றிகள் புலப்படுத்துவதாக அவர் சொன்னார்.
இந்த புதிய முறையின் கீழ் விதைகள் வழங்குவது, பயிரிடுவது, உரமிடுவது, பூச்சித் தொல்லையை கட்டுப்படுத்துவது மற்றும் விளை பொருள்களை வாங்கி ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பெரிய நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன.
விவசாயிகளுக்கு நிலத்தையும் கொடுத்து விவசாயம் செய்ய பணத்தையும் கொடுக்கும் பழைய முறை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.