ஷா ஆலம், செப் 2- சிலாங்கூரில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படுவதாக கூறப்படும் தகவலை பகிர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடந்த 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த உதவி நிதித் திட்டம் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியுடன் முடிவுக்கு வந்து விட்டதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
கடந்த 2020 ஜூலை மாதம் 22 ஆம் தேதியிடப்பட்ட அந்த செய்தியை தற்போது கண்ட ஆடவர் ஒருவர் இதன் தொடர்பில் விசாரிப்பதற்காக தமது அலுவலகம் வந்ததாக அவர் சொன்னார்.
அத்திட்டம் கடந்தாண்டில் ஆரம்பிக்கப்பட்டு ஆண்டு இறுதியுடன் முடிவுக்கு வந்து விட்ட தகவலை தாங்கள் அந்நபரிடம் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவது தொடர்பான அந்த செய்தியை காண நேர்ந்தால் அதனை மற்றவர்களுக்கு அனுப்பவோ பிறருடன் பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
அந்த திட்டத்திற்கு மாற்றாக கோவிட்-19 நோயால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 1,000 வெள்ளி மரண சகாய நிதியாக வழங்கும் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் www.selangorprihatin.com எனும் அகப்பக்கம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் சொன்னார்.
கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவித் தொகையாக 1,000 வெள்ளி வழங்கும் நோக்கில் கடந்தாண்டில் ஆரம்பிக்கப்பட்ட அத்திட்டம் தற்போது கோவிட்-19 நோயால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.