ஷா ஆலம், செப் 2- சுங்கை செமினி ஆற்றில் நீர் துர்நாற்றப் பிரச்னை ஏற்பட்டதற்கு பொறுப்பற்ற தரப்பினர் ஆற்றில் இரசாயனக் கழிவைக் கலந்ததே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜெண்டேராம் ஹிலிர், சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை ரிஞ்சிங் பகுதியில் நீரின் மாதிரி மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த உண்மை கண்டறியப்பட்டதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
நேற்று முன்தினம் பின்னிரவு 1.00 மணிக்கும் காலை 7.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மழை காரணமாக ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடிய சமயத்தில் இந்த இரசாயனக் கழிவு அதில் கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
ஆற்று நீர் துர்நாற்றத்தால் மாசுபடாமலிப்பதை உறுதி செய்வதற்காக லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் லாடாங் புக்கிட் உங்குல் பாலம் மற்றும் கம்போங் ரிஞ்சிங் பாலம் ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மாதிரி நீரை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.
அந்த நீரின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆற்று நீர் வழக்கமான நிலையில் காணப்பட்டதோடு நீரில் வாடை எதுவும் வீசவில்லை என்றார் அவர்.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய சுங்கை செமினி நெடுகிலும் உள்ள இரசாயனக் கழிவுகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது தமது தரப்பு சோதனை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.