ஷா ஆலம், செப் 2– சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் (பி.டி.ஆர்.எஸ்.) திட்டத்தில் பங்கேற்றுள்ள சுமார் 7,000 மாணவர்கள் இம்மாத இறுதியில் இலவச இணையச் சேவைக்கான சிம் கார்டுகளைப் பெறுவர்.
இதன் வழி அம்மாணவர்கள் ஓராண்டு காலத்திற்கு இலவச இணையச் சேவையை பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
இத்திட்டத்தை அடுத்த மாதம் தொடங்குவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தோம். எனினும், மாணவர்கள் இம்மாத இறுதியில் இச்சேவையைப் பெறுவதற்கு ஏதுவாக இத்திட்டத்தை விரைவுபடுத்தும்படி தொலை தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் 212 ஆசிரியர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் இலவச இணைய தரவு சேவை வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் சமூக நல கிளப்பிற்கு 100 உணவுக் கூடைகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பங்கு பெற இயலாமல் போனவர்கள் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இணைய தரவு திட்டத்தில் பங்கேற்கும் பி.டி.ஆர்.எஸ். மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கான கோட்டா தீர்ந்து விடும் பட்சத்தில் வணிகர்களுக்கான கோட்டாவிலிருந்து மாணவர்களுக்கு தரவு சேவை பகிர்ந்தளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 17,000 சிம் கார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.