ஷா ஆலம், செப் 3- இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட ரிப்போர்மாசி போராட்டம் நாட்டின் நலனுக்காக அனைத்து நிலையிலான மக்களையும் ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவ மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் உருவாக்கத்திற்கு அந்த போராட்டம் பெரிதும் துணை புரிந்ததாக அவர் சொன்னார்.
இந்த ரிப்போர்மாசி போராட்டத்திற்கு இறைவன் அருள் என்றென்றும் கிடைக்கட்டும் என்று தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்தும் துணைப் பிரதமர் பதவியிலிருந்தும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ரிப்போர்மாசி என்ற சீர்திருத்த அலை உருவானது. இதன் எதிரொலியாக கெஅடிலான் எனப்படும் பார்ட்டி கெஅடிலான் ராக்யாட் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.