கோலாலம்பூர், செப் 3- பொது மக்கள் உடல் நிலை குறித்த விபரங்களை எளிதில் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக மைசெஜாத்ரா செயலி புதிய அம்சங்களுடன் தரம் உயர்த்தப்படுகிறது.
உடல் நிலை குறித்த தகவல்களையும் தடுப்பூசி விபரங்களையும் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அந்த செயலியை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நேற்றிரவு தொடங்கி ஈடுபட்டு வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ கைரி ஜமாலுடின் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று நமது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை அன்றாடப் பணிகளை எளிதாக்கும். அந்த செயலியை தரம் உயர்த்தும் பணிகளை அடுத்து வரும் வாரங்களில் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார் அவர்.
நோய்த் தொற்றுக்கான தொடர்புகளை அறிந்து கொள்ளும் வகையில் கூடுதல் அம்சமாக பதிவிலிருந்து வெளியேறும் விசை ஒன்று மைசெஜாத்ரா செயலியில் சேர்க்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
ஓரிடத்திலிருந்து வெளியேறும் போது பதிவிலிருந்து வெளியேறினால் போதுமானது. அதற்கு ஒரு விசையை அழுத்தினால் போதும். ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.