ஷா ஆலம், செப் 3- கோவிட்-19 நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சையளிக்கும் மூன்று மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு அதன் முழு செயல்திறனுக்கு கீழ் குறைந்துள்ளது.
கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சைளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட சுங்கை பூலோ மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை, அம்பாங் மருத்துவமனை ஆகியவற்றில் நெரிசல் நிலவுவதாக முன்பு புகார் கூறப்பட்டு வந்தது.
தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாத 4,247 கட்டில்களில் 66 விழுக்காடு பயன்பாட்டில் உள்ளதாக சுகாதார அமைச்சு சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்ட தரவுகள் காட்டுகின்றன.
அம்மூன்று மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 350 கட்டில்களில் 99 விழுக்காடு கடும் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கோவிட்-19 நோயாளிகள்ன பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட கட்டில்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு குறைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கடந்த மாதம் 20ஆம் தேதி கூறியிருந்தார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் 60 வயதுக்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.