ஷா ஆலம், செப் 9- கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான நிலத்தகுதி மேம்பாட்டு நோக்கத்திற்காக மாற்றப்பட்டதை ரத்து செய்த சிலாங்கூர் மாநில அரசின் முடிவை கெஅடிலான் கட்சி வரவேற்றுள்ளது.
அதே சமயம், கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் நிலத்திற்கு மாற்றாக சபாக் பெர்ணம் மாவட்டத்தின் சுங்கை பாஞ்சாங், உலு சிலாங்கூரின் அம்பாங் பெச்சா, உலு லங்காட்டின் புக்கிட் புரோகா ஆகிய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட 1,436 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாநில அரசு தொடர்ந்து நிலை நிறுத்தியுள்ளதையும் தாங்கள் வரவேற்பதாக அக்கட்சியின் தொடர்பு இயக்குநர் ஃபாமி பாட்சில் கூறினார்.
இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவெடுத்ததற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான நில அந்தஸ்தை மீட்டுக கொள்ளும் முடிவை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக மந்திரி புசார் நேற்று கூறியிருந்தார். எனினும், பூர்வக்குடியினர் குடியிருப்பு மற்றும் இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்குக் கரை இரயில் தண்டவாளத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிய சிறிய நிலப்பகுதியில் மட்டும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான தகுதி அகற்றப்படும் என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
அந்த நிலத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டதை மாநில அரசு ரத்து செய்ததோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில உரிமையும் மீட்டுக் கொண்டுள்ளது.