ஷா ஆலம், செப் 9- தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாநிலம் நாளை மாறுவதைத் தொடர்ந்து சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக 10,000 சுற்றுலா பற்றுச்சீட்டுகளை மாநில அரசு விநியோகிக்கவுள்ளது.
இந்த சுற்றுலா பற்றுச்சீட்டு திட்டத்திற்காக மாநில அரசு 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
தலா 100 வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச்சீட்டுகளை வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
இந்த திட்டத்தை இம்மாதம் அல்லது அடுத்த மாதம் தொடங்கவுள்ளோம். ஆண்டு முடிய இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் அனைத்து பற்றுச் சீட்டுகளையும் இவ்வாண்டிலேயே பயன்படுத்தி முடித்தாக வேண்டும் என்றார் அவர்.
இயங்கலை வாயிலாக நடைபெற்ற 17 சுற்றுலா சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது சுற்றுலா பற்றுச்சீட்டு திட்டத்திற்கு 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டதாக கூறிய அவர், லஸாடா மற்றும் இ-வால்லட் பணப்பை திட்டத்தின் மூலம் அந்த பற்றுச்சீட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார்.