ஷா ஆலம், செப் 13- நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) கடைபிடிக்காமல் பெருந்திரளாக கூட்டம் கூடும் பொழுது போக்கு மையங்களை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களிடம் பரிந்துரைக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்படும் இத்தகைய பொழுதுபோக்கு மையங்களை தமது தரப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் துணை இயக்குநர் டத்தோ மாஸ்தோர் முகமது அரிப் கூறினார்.
பொதுமக்கள் குறிப்பாக சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவாசிகள் ஆறு, திடல் மற்றும் கடற்கரை போன்ற பகுதிகளில் ஒன்றுகூடுவதை போலீசார் அறிந்துள்ளனர். இப்பகுதிகளில் அவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதோடு எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தியும் வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
எனினும், அதிக கூட்டம் கூடி நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது போனால் சம்பந்தப்பட்ட சுற்றுலா மையங்களை மூடும்படி ஊராட்சி மன்றங்களிடம் பரிந்துரைக்கப்படும் என்றார் அவர்.
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா ஆகிய பகுதிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மாறின. இதனைத் தொடர்ந்து இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.