சிப்பாங், செப் 25- பாகான் லாலாங் கடற்கரைக்கு வருவோர் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) விதிமுறைளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
அடுத்த வாரம் தொடங்கி இந்த கடற்கரையில் எஸ்.ஒ.பி. விதிகளை மீறும் தனிநபர்களுக்கு 2,000 வெள்ளி வரையிலான அபராதமும் நிறுவனங்கள் அல்லது கழகங்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என்று சிப்பாங் நகராண்மை கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
அமலாக்க அதிகாரிகள் அப்பகுதியில் கடந்த இரு வார காலமாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதுவரை அவர்கள் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடித்ததோடு எஸ்.ஒ.பி. விதிகளை பின்பற்றும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
வருகையாளர்கள் தொடர்ந்து தன்மூப்பாக நடந்து கொண்டால் அடுத்த வாரம் முதல் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 16 முதல் 24 ஆம் தேதி வரை 2,968 வருகையாளர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, இக்காலக்கட்டத்தில் 243 வர்த்தக மையங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 34 மையங்கள் விதிகளை மீறியது கண்டு பிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
அச்சோதனை நடவடிக்கையின் போது 98 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெறாதது கண்டு பிடிக்கப்பட்டது. அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறும்படி அவர்கள் பணிக்கப்பட்டனர் என்றார் அவர்.